Feb 27, 2010

3 வழிகளில் சிகப்பழகு

வெயில் படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன.

தலையை கவனிப்பது முதல் வழி

தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பது போல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடு செய்ய ஒரு சீயக்காய் பவுடர் இருக்கிறது.
  1. சீயக்காய் - கால் கிலோ
  2. பயறு - கால் கிலோ
  3. வெந்தயம் - கால் கிலோ
  4. புங்கங்கொட்டை - 100 கிராம்
  5. பூலான் கிழங்கு - 100 கிராம்
இவற்றை நன்றாக மிஷினில் அரைத்துக் வைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் 2 முறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து இந்த பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய் பசை ஒரேடியாக போகாமல் கருமையும் மறைய தொடங்கும்.

அடுத்ததாக கவனிக்க வேண்டியது சருமம்

வெயியில் போவதற்கு முன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு துடைத்துவிட்டு டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

வெளியில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால், நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ இந்த குளியல் பவுடரை பயன்படுத்தினால் சருமம் மிளிரும்.
  1. பயத்தம் பருப்பு - 100 கிராம்
  2. கட்லை பருப்பு - 100 கிராம்
  3. பூலான் கிழங்கு - 50 கிராம்
  4. கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
  5. வெள்ளரி விதை - 100 கிராம்
  6. வெட்டிவேர் - 25 கிராம்
இவற்றை மிஷினில் அரைத்து தினமும் பூசி குளியுங்கள்.

வாரத்தில் 2 நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை ப்ளீச் சிகிச்சை இருக்கிறது.

தோல் சீவிய உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.

உடம்பில் சூடு அதிகமாகும்போது தோலின் கருமை அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சை காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.


No comments: